Tuesday, October 11, 2016

தினம் ஒரு பாசுரம் - 79

தினம் ஒரு பாசுரம் - 79

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக் கலை பரவும்

தனி யானையைத் தண்டமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்

இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.

--- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)

இன்று விஜயதசமி ஸ்பெஷலாக ‏@Kalsekhar கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு பாசுர விளக்கம் எழுத முடிவெடுத்தேன்.  அமுதனாரின் ஓர் அமுதப் பாசுரத்தை அனுபவிப்போம். பெரும் செல்வந்தராக ”பெரியகோயில் நம்பி” என்ற இயற்பெயர் கொண்ட அமுதனாரை நல்வழிப்படுத்தி, தமது சீடராக ஆக்கிக் கொண்டு, அன்னாரை இராமானுஜ நூற்றந்தாதி என்ற அற்புதத்தை அருளச்செய்த கூரத்தாழ்வானை (இராமனுஜரின் பிரதம சீடர்களில் முக்கியமானவர்) நினைவு கூர்ந்து போற்றுவோம்!

அமுதனார் தன் ஆச்சார்யனையும் “மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம். குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்...” என்று பிறிதொரு ரா.நூ பாசுரத்தில் போற்றியிருப்பார்.

பொருளுரை:

முனியார் துயரங்கள் முந்திலும் - துன்பங்கள் மிகுந்தாலும் வெறுப்புணர்வு/வருத்தம் கொள்ளாதவர்,
இன்பங்கள் மொய்த்திடினும் - இன்பங்கள் (பல) சூழ்ந்து நின்றாலும்
கனியார் மனம் - (தமது) உள்ளக் களிப்பு கொள்ளாதவர்
கண்ணமங்கை நின்றானைக் - திருக்கண்ணமங்கை திவ்யதேசத்தில் நின்று ஆளும் பக்தவத்சலப் பெருமாளை
கலை பரவும் - சாத்திரங்கள், தோத்திரங்கள், ஆயகலைகள் என அனைத்தாலும் போற்றித் துதிக்கப்படுகிற,
தனி யானையைத் - ஒப்பிலாத, ஒரு வீறு கொண்ட யானையைப் போல விளங்குகிற அந்தப் பரந்தாமனை,
தண்டமிழ் செய்த நீலன் - (பெரியதிருமொழி உட்பட்ட ஆறு பிரபந்தங்கள் அருளி) குளிர்த்தமிழ்ப் பாசுரங்களால் போற்றிய திருமங்கை மன்னனை 
தனக்கு உலகில் இனியானை -  தனக்கு இந்தப் பூவுலகில் மிக்க உவப்பானவராக (உள்ளத்தில்) ஏற்ற
எங்கள் இராமானுசனை - எங்கள் (எம்பெருமானாரான) இராமனுச முனியை
வந்து எய்தினரே - வந்தடைந்து (திருவடி) பணிந்தனரே!

பாசுரக்குறிப்புகள்:

இராமனுஜரின் சிறப்பை, அவர் திருவடி பணிந்த அடியவரின் இயல்புகளை ஏற்றிச் சொல்லி, வெளிப்படுத்தும் நேர்த்தியான பாசுரம், இல்லையா? அமுதனார் குறிப்பிடும் அடியார்கள், இன்பம், துன்பம் என்ற இரண்டையும் சீராக நோக்கும் குணம் கொண்டவர்கள், உள்ளத்து உறுதி மிக்கவர்கள், பற்று அற்றவர்கள் (ஆக கற்றறிந்த சான்றோர் என்பது தெளிவு). அத்தகையவரே, ராமானுஜரைத் தேடிவந்து அவர் திருவடியில் சரண் புகுந்ததாக திருவரங்கத்து அமுதனார் அழகாக அருளுகிறார்!

மேற்கூறிய வகை அடியவரைக் குறிப்பிடும் பாசுரத்தில் திருமங்கையாழ்வாரைப் போற்றுவதில் ஒரு பொருத்தம் உள்ளது. கலியன், நீலன், பரகாலன், மங்கை மன்னன் என பல திருநாமங்கள் உடைய ஆழ்வாரும் தனது ஆரம்ப வாழ்வில் இன்ப வாழ்க்கை வாழ்ந்தவர். பின்னர், குமுதவல்லி நாச்சியார் மேல் மையல் கொண்டு, அவரை மணம் புரியவேண்டி, ஒரு வைணவராக ஆகி, தொண்டு செய்யவேண்டி, பல இன்னல்களைச் சந்தித்தவர். ஆக, திருமங்கை ஆழ்வார் இன்பங்களை எளிதாக விட்டொழித்ததோடு, துனபங்கள் குறித்தும் கவலை ஏதும் இன்றியே இருந்தவர் என்று புலப்படுகிறது அல்லவா!

பின்னர், திருவாலித் திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளப் பெருமாள், ஆழ்வாரை தடுத்தாட்கொண்டு, அவருக்கு திருமந்திர உபதேசம் பண்ணி, அவரை 6 திவ்வியப் பிரபந்தங்கள் அருளச் செய்தது (''மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த'' - உபதேச ரத்தினமாலை) நாம் அறிந்த ஒன்றே.

பெருமாளையும், ஆச்சார்யப் பெருமக்களையும் யானையுடன் ஒப்பிடுவது உண்டு. அவ்வகையில், திருக்கண்ணமங்கைப் பெருமாளை அமுதனார் ஒப்பில்லாதொரு கம்பீர ஆனையாகப் பார்க்கிறார்! நம்மாழ்வார் ஒரு திருவாய்மொழிப் பாசுரத்தில் ”தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து, என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே” என்று தண் திருவேங்கடம் வாழ் அண்ணலை யானையுடன் ஒப்பு நோக்குகிறார். பிறிதொரு பாசுரத்தில் “மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை என்னப்பன் என் நெஞ்சிலுல் உளானே” என்று நம்மாழ்வார் உருகுகிறார்!

கண்ணன் மீது கொண்ட பேரன்பில் நம் ஆழ்வார், யசோதைக்கு நிகரானவர். கோகுலக்கண்ணனை ஒரு குட்டி யானையாக பார்க்கிறார், “அசோதைக்கு அடுத்த பேரின்பக் குலவிளங் களிறே! அடியனேன் பெரிய அம்மானே! கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கைஉகிர் ஆண்ட வெங்கடலே”. அதோடு, பரமன் ஆனவன், ஒரு யானைக்கு (கஜேந்திரன்) அருள் செய்த யானையும் கூட :-)

திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகப் பாசுரத்தில்
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலதாயினாய்” என்று பெருமாளை நாற்திசை யானைகளாக உருவகித்து ஏற்றிப் பாடுகிறார். அதாவது, ”தென்திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை மலையில் (கள்ளழகர் கோயில்) வீரக் களிறாய், வடவேங்கடத்தில் (திருமலை) பெருமைமிகு களிறாய், மேற்கில் திருவரங்கத்தில் பள்ளி கொண்ட யானையாய், கிழக்கில் திருக்கண்ணபுரத்தில் வடிவுடை யானையாய்” என்று பக்திப் பேருவகையில் ஆழ்வார் அருளியதை ஓதுகையில் மெய்சிலிர்க்கும்! முழுப்பாசுரம் கீழே. சொல்லிப்பாருங்கள், உங்களுக்கே புரியும்!

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்,
என் ஆனாய்? என் ஆனாய்? என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன், உலகம் ஏத்தும்
தென்னானாய் வடவானாய் குடபால் ஆனாய் குணபால் அது ஆயினாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக்களத்தானாய் முதல் ஆனாயே!


தண்டமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை எங்கள் இராமானுசனை - இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். அதாவது, திருமங்கையாழ்வாருக்கே மிக்க உவப்பளித்தவராக இராமனுஜர் திகழ்ந்தார் என்று மாற்றிப் பொருள் கொண்டாலும் தவறில்லை!

--- எ.அ.பாலா

Tuesday, October 04, 2016

தினம் ஒரு பாசுரம் -78

தினம் ஒரு பாசுரம் -78

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.

 
-- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இப்பாசுரத்தில் தொடங்கும் திருவாய்மொழிப் பதிகத்தை தினம் ஒதுமாறு இன்று ஒரு ட்வீட் இட்டேன். நண்பர்கள் சிலர் பொருளும், பலனும் கேட்க, பல வாரங்களுக்குப் பின் “தினம் ஒரு பாசுரம்” இடுகை இட ஒரு உந்துதல் கிட்டியது. முதலில் நேர்ப்பொருள், பின் பாசுரக்குறிப்புகள்.

பொருளுரை:

கற்பார் - கற்க எண்ணுபவர்கள்
இராமபிரானை அல்லால் - (சக்கரவர்த்தித் திருமகன்) இராமனின் பண்பையும் மாண்பையும் விடுத்து
மற்றும் கற்பரோ? - வேறொன்றை கற்க நினைப்பார்களா? (மாட்டார்கள்!)
புற்பா முதலாப் - புல் இனங்கள் தொடங்கி
புல் எறும்பு ஆதி - (சிறிய அளவில் இருக்கும்)அற்பமான எறும்பு, சிற்றுயிர் ஆகியவையோடு
நற்பால் அயோத்தியில் வாழும்- நல்லொழுக்கம் சிறந்து ஒங்கும் அயோத்தி மாநகரில் வாழ்கிற
சராசரம் முற்றவும் - (இன்ன பிற) உயிரினங்கள், மாந்தர் வரையிலும்
ஒன்று இன்றியே - (அவை, அவர்கள்) எவ்வித முயற்சியும் செய்யாத போதிலும்
நற்பாலுக்கு உய்த்தனன் -  நற்தன்மைகளுடன்/குணங்களுடனும் விளங்கும்படிச் (இராமன்) செய்தனன்
நான்முகனார் பெற்ற நாட்டுளே - பிரமன் படைத்த இந்த பூவுலகத்து (வாழ்விலே)!

பாசுரக் குறிப்புகள்:

திருமால், இறைத்தன்மையை விடுத்து சாதாரண மனிதனாக எடுத்த அவதாரம் இராமாவதாரம். ஒரு மனிதனாக வாழ்ந்ததால் சில தவறுகள் ஏற்பட்டிருப்பினும், இராமபிரான், தன் பூவுலக இருத்தலில், உலக மாந்தர்க்கு ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியாகவே வாழ்ந்து காட்டினான்.  அத்தகைய இராம அண்ணலின் குண கீர்த்தியை நம்மாழ்வார் இப்பாசுரத்தில் அருளியிருக்கிறார்! இராமன் நல்லொழுக்கம், வீரம் ஆகியவற்றில் சிறந்தவனாக இருந்தாலும், அவனது கருணைக் குணமே தலை சிறந்ததாக இருந்தது.


அவன் வனவாசம் சென்றவுடன், அவன் பிரிவால், அயோத்தியில் இருந்த மரங்கள், செடி கொடிகள் கூட துயருற்று, இலை உலர்ந்து/உதிர்ந்து, மலர் வாடிக் காணப்பட்டனவாம்.  குளம், குட்டை, ஆறுகளில் நீர் கொதிப்படைந்ததாம். பாசுரத்தில் “கற்பார்” என்பதற்கு “சான்றோர்” எனவும் பொருள் கொள்ளலாம். ஆக, சான்றோரே, இராமனைக் கற்பதை தலையாய ஒன்றாக நினைக்கையில், நம் நிலைமையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.



ஒன்று இன்றியே நற்பாலுக்கு உய்த்தனன் - ஆழ்வார் ஆணித்தரமாக அருள்கிறார்! இராமபிரான் ஆனவன், தன் இருப்பால், அனைத்து அயோத்தி வாழ் உயிரினங்களையும் நற்பண்பு மிக்கவையாக வைத்திருந்தான் என்கிறார். அத்தகைய குணப்பெருந்தகையாக இராமன் இருந்தான். இதில் இன்னொரு செய்தி இருப்பதாகவும் கொள்ளலாம். பரந்தாமன், தன் விருப்பத்தின் பேரில், அடியார் என அவன் நினைக்கும் எவரையும் தடுத்தாட்கொண்டு, பரமபதம் எனும் பெருவாழ்வை அருள வல்லவன்!

தினம் ஒரு பாசுரம்-72 ஐ நினைவு கூர்கிறேன். குலசேகரப் பெருமாள் தன் பாசுரத்தில், இராமவதாரம் முடிவுற்று திருமால், கம்பீரமாக வைகுந்தம் எழுந்தருளிய காலத்தில், அயோத்தி வாழ் சராசரங்கள் எல்லாவற்றுக்கும் பரமபத பதவி அருளினான் என்று பாடுகிறார். இராமபிரான் கருணை வள்ளல், பரம தயாளன்! 

இப்பாசுரத்தில் ஆரம்பிக்கும் பதிகத்தை தினம் ஓதினால், தீராப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்பர். இராமனே பல இன்னல்களை சந்தித்தவன் என்பதால் அடியவரின் துயர் புரிந்து அதை சிக்கெனக் களைவான் என்று சொல்லலாம் தானே :-) இப்பதிகத்தை உரைப்பதால், தீர்வு என்பதை விட பிரச்சினைகளை எதிர்கொள்ள மனத்தெளிவும், வலிமையும் மிகும். ஆழ்வாரே சொல்லும் செய்தி தான் இது. பதிகத்தின் கடைப்பாசுரத்தில், “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு” என்று தொடங்கி “தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுலகத்துள்ளே” என்று நிறைவு செய்கிறார்.

--- எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails